menu






 இலக்கியம >> கவிதை >>
  • இன்னொரு ராவணன்

    - க.நா. சுப்ரமணியன் கவிதைகள்.

இன்னொரு ராவணன் தோன்ற வேண்டும்
இன்றுள்ள ராவணர்கள்-ராவணர்களுக்கு
என்றுமே பஞ்சமில்லை-சினிமா வில்லன்களாக
லங்கைக்குப் போகும் வழியிலேயே கா¡¢யத்தை
முடித்துக் கொண்டு விடுகிறார்கள். "ஐயகோ
என் பெண்மையைக் குலைத்து விட்டார்களே
என் கற்பை உறிஞ்சி விட்டார்களே" என்று
கதறும் சீதைகளைப் பார்த்து அனுதாபப்
பாடுபவர்கள் போல இன்றைய ராவணர்கள்
கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விளம்பரம்
தேடுகிறார்கள். ராமனின் அணையைக் கட்ட
முன்னேற்றம் என்கிற பெயரால் அவர்களே
உதவுகிறார்கள். ராமனின் வரவை எதிர்
நோக்கிக் காத்திருக்கும் சீதைகளும்
இன்று இல்லை. அவன் இல்லாவிட்டால்
இவன்-இருவரும் அரசர்களே என்று
திருப்தியுற்று விடுகிறார்கள். ராமன்
ராமனாகவும் ராவணன் ராவணனாகவும்
சீதை சீதையாகவும் இருக்க ஒரு
லங்கைத் தெம்பு வேண்டும் இன்று
லங்கையே லங்கையாக இல்லையே!
எப்படி ராமனும் சீதையும் ராவணனும்
தோன்றுவார்கள்? தோன்றினாலும்
தொ¢ந்து சொல்லும் வால்மீகிகள் எங்கே?