menu






  இலக்கியம >> அறநெறிச்சாரம்

அறநெறிச்சாரம்

முனைப்பாடியார்

 

இந்நூலை எழுதியவர் அருக சமயத்தைச் சார்ந்த முனைப்பாடியார் ஆவார். இந்நூலில் 226 பாடல்கள் உள்ளன. அருக சமயக் கருத்துக்கள் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அறத்தையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்தும் சிறந்த நீதி நூலாக இந்நூல் விளங்குகிறது.

இறை வணக்கம்

தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்து ஈண்டற நெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து. 1

நூல் பாயிரம்

மறவுரையும் காமத்துரையும் மயங்கிப்
பிறவுரையும் மல்கிய ஞாலத் - தறவுரை
கேட்கும் திருவுடையாரே பிறவியை
நீக்கும் திருவுடையார். 2

ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடன்

உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பின்றி
நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு. 3

அறம் கொல்வோன் இயல்பு

அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் - துறங்தடங்கி
மன்னுயிர்க்கு உயந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்டான். 4

அறம் கூறத் தகுதியற்றவன் குணம்

பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
வெள்ளைகளிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்
புரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்குரிமையிலாதார். 5

அறம் கேட்பதற்கு உரியவர் குணம்

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் - படுமாற்றால்
ஒப்புரவு செய்தாண்டுறுதிச் சொல்சேர்பவன்
தக்கான் தரும் உரைக்கு. 6

அறநூலைக் கேட்கத் தகுதியற்றவர்கள்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
என்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம். 7

நல்லற இயல்பு

வினை உயிர்கட்கு வீடு இன்ன விளக்கித்
தினையனைத்தும் தீமையின்றாகி - நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்த்துலகினோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டு மிடத்து. 8

அறத்தின் போலி

ஆவட்டை போன்றறியாதாரை மயக்குறுத்திப்
பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க் - காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவாதனவே
தருமத்துப் போலிகல் தாம். 9

அறவுரையின் பயன்

புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல்
நல்வர் இவரென்று நட்பாடல் - சொல்லின்
அறங்கேள்வியால் ஆம்பயன் என்று உரைப்பர்
மறங்கேள்வி மாற்றியவர். 10

கேட்டதனால் ஆய பயன்

காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி மனை வாழ்தல் அன்றியும் - மீட்சியில்
வீட்டுவகம் எய்தல் என இரண்டே நல்லறம்
கேட்டதனால் ஆய பயன். 11

நூல்

பத்து அறம்

மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, தவம், அடக்கம்,
செம்மை, ஒன்றின்மை, துறவுடைமை - நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம் பத்தும் ன்ற குணம். 12

அறத்தினும் சிறந்தது இல்லை.

தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையும் செய்து - மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோடு
ஏகமா நண்பொன்றுமில். 13

அறமே துணை

ஈட்டிய ஒண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் - மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை. 14

உலகத்து அறம்

நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கு - யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்தறம். 15

 

பின்னே

Top

முன்னே